Friday, May 1, 2020

364. ஈஸ்வராம்பா திருப்புகழ் ( நாத விந்து கலாதி நமோ நம )


பர்த்திபுரீசனின் மாதா நமோ நம எங்களின் அன்னையும் நீதான் நமோ நம
தெய்வத்தைச் சேயென ஈன்றாய்-உதாரண அன்னையும் நீ தானே..!

சாயிராம் போற்றிய புண்ணிய சாலிநீ தெய்வத்தை ஈன்றிட்ட பாக்கிய சாலிநீ
கண்ணாய்க் காத்துநீ ஆருயிர் ஸ்வாமியை பாருக்குத் தந்தாயே..!

வேத நாயகன் ஸ்ரீ சாயி நாதனின் மாதமஹேஸ்வரி நீதான்தாயே கதி
போதம் தருகின்ற பாதார விந்தனைக் கருவினில் கொண்டாயே..!

ஈஸ்வரன் தனைச்சேயாய்  உதரத்தில் தாங்கிடும் –
உன்அரும் பெரும்பேறைக் கண்டாரே கொண்டமர்
ஈஸ்வரி எனும்பேரைத் தந்தாரே அவர்-உயர் உண்மையை அறிந்தாரே..!  

சத்தியநாரண வ்ரதகல்ப பூஜையை சுத்தசத்..துவசித்தம் உருவாகிச் செய்து நீ
நித்தியம் அலைதுயில் ஸ்ரீசாயிநாரணன் தன்னையே பெற்றாயே..!

அண்டத்திலேஒளிர் உயர்வான பேரொளி பிண்டத்திலேஅது ஜீவான்மத்தின்ஒளி
உதரத்திலே-வெளிர் நீலத்தில் அவ்வொளி வந்திடக் கொண்டாயே..! 

நெஞ்சினில் தன்னலம் துளியற்ற தாய்மைநீ பஞ்சினில் செய்திட்ட போல் அதைக் கொண்டநீ
பர்த்தியில் பள்ளியும் நீர்நிலை மருந்தகம் வந்திடச் செய்தாயே..!

தேவதேவப்ர..சாந்தி-நிவாசனை  காடுலாவிடும் சிவனாரின் ரூபனை
வேறு எங்கேயும் செல்லாமல் பர்த்தியில் தங்கிட வைத்தாயே..!

அன்னையே மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதியாய் முன்னுக்கும் முன்னுக்கும் முன்னான ஆதியாய்
என்றைக்கும் நின்றாளும் ஸ்ரீசாயிநாதனை கண்ணெனக் கொண்டாயே..!

அன்..னை ஈஸ்வரி சரணங்கள் போற்றியே
அன்னைக்கும் அன்னையுன் திருநாமம் போற்றியே
என்றைக்கும் எங்களின் நெஞ்சத்தின் கோவிலில் நின்றிடுவாய் தாயே..!



No comments:

Post a Comment